கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக மாணவிகள் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கிய இந்த சர்ச்சை, தற்போது நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வார விசாரணையின்போது, “வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது” என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இருப்பினும் ஹிஜாப் அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை கல்வி நிலையங்களுக்கு அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து ஹிஜாப் பிரச்சனையால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பிப்ரவரி 14ல் 10 வகுப்பு வரை பள்ளிகளும், பியூ, டிகிரி கல்லூரிகள் பிப்ரவரி 16 முதலும் செயல்பட துவங்கின. முன்னெச்சரிக்கையாக உடுப்பி, மைசூரு, ஷிமோகா ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் தடுத்து ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்துகின்றனர். இதற்கு சில மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து துமக்கூருவில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிக்கமகளூரு, துமக்கூரு, ஷிமோகா ஆகிய இடங்களில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டதற்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்தினர். துமக்கூருவில் உள்ள எம்பிரஸ் பெண்கள் பி.யு. கல்லூரிக்கு வெளியே ஹிஜாப் அணிந்த மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கல்லூரி நிர்வாகம் விடுத்த எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்தியதாக மாணவிகள் மீது கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாநில காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், பிப்ரவரி 17, வியாழன் காலை 10 மணியளவில், ஹிஜாப் அணிந்த 10 முதல் 15 மாணவிகள் கொண்ட குழு கல்லூரிக்கு வெளியே கூடி போராட்டம் நடத்தினர். ஹிஜாப் தடை உத்தரவு நகல் கல்லூரி வாயிலின் சுவரில் ஒட்டப்பட்டுள்ளது.

அதையும் மீறி மாணவிகள் குழு சட்டவிரோதமாக கூடி, ஹிஜாப் அணிந்து கல்லூரியில் சேருவோம், அதை அகற்ற மாட்டோம் என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு, கல்லூரியின் தினசரி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அதில் போராடிய மாணவிகள் பெயரை குறிப்பிடாமல், பொதுவாக 10 முதல் 15 மாணவிகள் கொண்ட குழு என்று காவல்துறை பதிவு செய்துள்ளது.

முன்னதாக சிவமொக்கா மாவட்டம் சிரளகொப்பாவில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் தடையை மீறி மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை உரிமை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தாசில்தார், காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, 144 தடை உத்தரவு பற்றி எடுத்து கூறினர். ஆனால் அவர்கள் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.