அமெரிக்காவில் ரட்ஜர்ஸ் பல்கலைகழகமும் கனடா நியூ பிரன்ஸ்விக் பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் முடிவுகள் விவரம் அறிவியல் உலகத்துக்கு பல புது விஷயங்களை அறிவித்து உள்ளது

வைஃபை அல்லது கம்பியில்லா சிக்கனல்களை பயன்படுத்தி உலோகத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், அலுமினிய கேன்கள், மடிக்கணினிகள், பேட்டரிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றின் வடிவத்தை/ பரிமாணங்களை இனங்கண்டு, அபாயம் விளைவிக்கக்கூடிய பொருட்களை கண்டறிய முடியும் என்று ரட்ஜர்ஸ்-நியூ பிரன்ஸ்விக் பல்கலைகழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், தண்ணீர், அமிலம், ஆல்கஹால் மற்றும் மற்ற திரவ வடிவிலான இரசாயனங்களின் அளவையும் இந்த வைஃபை சிக்கனல்களை கொண்டு கண்டறியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வைஃபை இணைப்புகளில் வெளிப்படும் சிக்கனல்களை கொண்டு பள்ளி-கல்லூரி-அலுவலக வளாகங்கள், பேருந்து-ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களுக்கு கொண்டுவரப்படும் பைகளிலுள்ள வெடிகுண்டுகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டறியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்களில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் முறைகளுக்கு மனிதர்களின் உதவி தேவைப்படுவதுடன் அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதாகவும், மக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் தாங்கள் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டளவில் எளிமையானதாகவும், செலவை பெருமளவில் குறைப்பதாக இருப்பதாகவும் கூறுகிறார் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கிய குழுவில் ஒருவரான நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழக பேராசிரியர் யின்யிங் சென்.

இந்த அமைப்பை நிறுவுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆன்டெனாக்களை கொண்ட வைஃபை சாதனம் தேவைப்படுமென்றும், சாதனத்திலிருந்து வெளிப்பட்டு பொருட்களின் மீது பட்டு அமைப்புக்கு திரும்ப வரும் அலைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது சாத்தியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.