மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை சுற்றி உள் நுழைய- வெளியே செல்ல உள்ள அனைத்து வழிகளும் விவசாயிகளால் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுடனான 2 கட்ட பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து நாளை (டிசம்பர் 5) மத்திய அரசுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், பாரதிய கிசான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹெச்.எஸ்.லாகோவால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “ஏற்கெனவே எங்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் தெளிவுபடுத்தி உள்ளோம். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, போராட்டம் தொடரும். வரும் 8ம் தேதி அகில இந்திய அளவில் பந்த் நடத்துவதற்கு பாரதிய கிசான் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது” என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்; போலி செய்தி பரப்பியதற்காக மன்னிப்பு கோரி நடிகை கங்கனாவிற்கு நோட்டீஸ்