வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஹரியானா போலீசார் தடைகளை ஏற்படுத்தி தடுத்து கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், அந்த சட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகளால் அம்மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடி வருகிறார்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில், ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி சென்றனர்.

[su_image_carousel source=”media: 19299,19300″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

விவசாயிகளின் பேரணி காரணமாக பஞ்சாப், அரியானா எல்லையை மூடுமாறு ஹரியானா அரசு உத்தரவிட்டிருந்தது. அதனால் போராட்டத்தை தடுக்கும் வகையில், ஹரியானவில் தற்போது பல இடங்களில் தடுக்கப்பட்டுள்ளனர்.

அதை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள், கருப்புக் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர். நிலைமை எல்லை மீறியதால் போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.

இதன் காரணமாக அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டத்தை ஒடுக்க மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவை ஹரியானா மாநில போலீசார் பிறப்பித்து உள்ளனர். டெல்லியிலும் விவசாயிகளும் குவிந்ததால் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் டெல்லி சென்று போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் புதிய வங்கி தொடங்க அனுமதிப்பது மோசமான யோசனை- ரகுராம் ராஜன்