டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயி ஒருவர் நடமாடும் கழிப்பறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலும் கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் 24 மணி நேரமும் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டதில் கலந்து கொண்டவர்களில் 45-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலையில் காசியாபாத்தில் உள்ள போராட்ட களத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சர்தார் காஷ்மீர் சிங் தாஸ் என்ற 70 வயதான விவசாயி அங்கு உள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

இறப்பதற்கு முன்பு காஷ்மீர் சிங் தாஸ் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அக்கடிதத்தில் காஷ்மீர் சிங் தாஸ், “எனது மரணம் போராட்டத்தில் ஒரு பங்களிப்பாக இருக்கும். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. இவை இந்தியாவின் அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்காது.

இதனை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள். ஆனால் அரசு அவற்றை ரத்து செய்யவில்லை. இந்த போராட்டத்தில் பஞ்சாபில் இருந்து பல விவசாயிகள் ஏற்கனவே இறந்துள்ளனர்.

ஆனால் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எந்த ஒரு விவசாயியும் உயிரைக் கொடுக்கவில்லை. ஆகவே வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்காக எனது உயிரை தியாகம் செய்கிறேன்” என்று உருக்கத்துடன் எழுதப்படிருந்தது.

இந்நிலையில் காஷ்மீர் சிங் தாஸ் தற்கொலை போராட்டம் நடத்தும் விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெரும் வரை போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி