வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதுபெற்ற பஞ்சாப் எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த இரண்டு மாதங்களாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து டெல்லி சென்று லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ‘டெல்லி சலோ’ போராட்டம் 9-வது நாளை எட்டி உள்ள நிலையில், 8 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முன்வந்தது. எனினும், வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் டிசம்பர் 05 கருப்புக்கொடி அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பத்ம விபூஷண் விருது பெற்ற பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் விருதை திருப்பி வழங்கினார். அதேபோல் பத்மஸ்ரீ விருது, அர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரர்களும் தங்கள் விருதுகளை திரும்பப் தரப்போவதாக அறிவித்தனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு; பத்ம விபூசன் விருதை திருப்பி வழங்கிய முன்னாள் முதல்வர்

இந்நிலையில் தற்போது பஞ்சாப்பின் மூத்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், அரசுக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாக தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.

பஞ்சாப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சிர்மோர் ஷைர் டாக்டர் மோகன்ஜித், சிந்தனையாளர் டாக்டர் ஜஸ்விந்தர் சிங், நாடக ஆசிரியர் திரிபூன் ஸ்வராஜ்பீர் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளித்துள்ளனர்.

வேளாண் சட்டம்: நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு