விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், கேல் ரத்னா விருதை திருப்பியளிப்பேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 11வது நாளாக தொடரந்து வருகின்றனர். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஹரியானா- டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் நடைபெறும் போராட்டத்தில், கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், “வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெறாவிட்டால், எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பித் தருவேன் என விஜேந்தர் சிங் கூறினார்.

வேளாண் சட்டம் எதிர்ப்பு; சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள்