வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால், இன்று (ஜனவரி 08) நடந்த 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவவசாயிகளின் போராட்டம் இன்று 44வது நாளை எட்டியுள்ளது.

மத்திய அரசுக்கும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே 7 சுற்றுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இன்று 8வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டெல்லியில் விக்யான் பவன் அரங்கில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

‘போராட்டத்தின் மூலம் வெற்றியை எட்டுவோம்; இல்லையெனில் உயிரை விடுவோம்’ என்று எழுதப்பட்ட பதாகையை பேச்சுவார்த்தை நடைபெறும் மேஜையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், 2 மணி நேரத்திற்கும் குறைவாக நீடித்த இன்றைய பேச்சுவார்த்தையும் எந்தவித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை அரங்கில் விவசாயிகள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விவசாய சங்கங்களும், சட்டங்களை திரும்பப்பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசும் உறுதியாக இருப்பதால் 8 ஆம் கட்டமாக நடந்த இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையேயான 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலர் ஹனன் மொல்லா கூறுகையில், “இன்று நடந்த ஆலோசனையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதை தவிர வேறு எதுவும் தேவையில்லை என தெரிவித்தோம். சட்டங்கள் நீக்கப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டெல்லியில் தேசியக் கொடியுடன் டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி போராட்டம்