மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 36 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெரும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் உறுதியாக உள்ளனர். அவர்களுக்கு நாடெங்கும் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் கேரள மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. அதில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றி பேசிய முதல்வர் பினராயி விஜயன், பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது.

இந்த சட்டங்களால் நாடு சிக்கலான சூழலை எதிர் கொண்டுள்ளதாகவும், கேரள அரசு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

வேளாண் சட்டங்கள் இங்கு அமலாகாது என அறிவித்து கேரள முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்துக்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததால் பெரும்பான்மை பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி