மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து, 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 49வது நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடக் கோரி, மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இன்று (ஜனவரி 12), வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தீர்ப்பு அளித்து உள்ளது.

மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் போராட்டத்தை தொடரவும் அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில், பூபிந்தர் சிங் மான், பிரமோத் குமார் ஜோஷி, அலோக் குலாட்டி, அனில் கன்வத் ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேரும், வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசி வந்தவர்கள். குறிப்பாக குழுவில் இடம்பெற்றுள்ள பூபிந்தர் சிங் மான், வேளாள் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்தால் போனது என கடந்த மாதம் வேளாண்துறை அமைச்சர் தோமருக்கு கடிதம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது; தோல்வியில் முடிந்த 8ம் கட்ட பேச்சுவார்த்தை