வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை தமிழக அரசு குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், மருந்து தயாரிக்கும் சன் ஃபார்மா நிறுவனத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த சரணாயத்திற்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலிலிருந்து நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்பட, 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

இந்த பறவைகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கல் வருகிறார்கள். இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள், கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

[su_image_carousel source=”media: 15186,15187″ crop=”none” autoplay=”2″ image_size=”medium_large”]

இந்நிலையில், வேடந்தாங்கலின் பரப்பை குறைக்க தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “வேடந்தாங்கல் சரணாயத்தின் பரப்பு 30 ஹெக்டேர். கடந்த 1996ல் வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள குளத்தை சுற்றி 5 கிலோமீட்டர் பரப்பளவு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோமீட்டரில் இருந்து 3 கிலோமீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான உத்தரவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், தேசிய விலங்குகள் நல வாரியத்தி்கு கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும்.இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

எனவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். மேலும் விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார்.

[su_image_carousel source=”media: 15188,15189″ crop=”none” autoplay=”2″ image_size=”medium_large”]

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் “பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் விளம்பரத்திற்காக இந்த வழக்குத் தொடரப்பட்டதாகவும், மேலும், அந்தப் பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனங்களையும், மத்திய அரசையும் எதிர்மனுதார்களாகச் சேர்க்கவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், “விளம்பரத்திற்காக இந்த வழக்குத் தொடர்ந்திருந்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவைத் தள்ளுபடி செய்ய நேரிடும் என எச்சரித்தனர். மேலும், இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் வாசிக்க: போலி இ-பாஸ் விற்பனை: 3 அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது