2015 ஆம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது.. எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன.. என்று சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில் சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலை அகலப்படுத்துவதில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட முறையான வசதிகளை ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு இன்று (09-11-2021) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் சென்னை மீண்டும் தத்தளிப்பது ஏன் என்று தலைமை நீதிபதி, சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் மிதக்கிறது.

2015 ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தை பாடமாகக் கொண்டு வரும் எதிர்கால பருவமழையை சமாளிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சென்னையில் மீண்டும் மழைநீர் தேங்கியது ஏன்? 2015ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? பெருவெள்ளத்திற்கு பிறகு 5 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது? என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், சென்னையில் ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து பொதுநல வழக்கு தொடரும் என்றும் கூறி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.