சென்னையில் வீட்டையே சூதாட்ட கிளப்பாக நடத்திய புகாரில் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 பி, லேசா லேசா உள்பட தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஷாம். இவருக்கு சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜூலை 27 இரவு அதிரடியாக அடுக்குமாடி வீட்டுக்குள் புகுந்து போலீஸார் சோதனை நடத்தினர்.

சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டுக் கட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த அடுக்குமாடி வீட்டில் பல நாட்களாக சூதாட்டம் நடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த அடுக்குமாடி வீட்டை நடிகர் ஷாம் ஒரு சூதாட்ட கிளப் போல் நடத்திவந்திருப்பதும், சீட்டு விளையாடவே நடிகர்கள், இயக்குனர்கள் உள்பட பலரும் வருவது வாடிக்கை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூதாட்டத்தில் வக்கீல்கள், இன்சூரன்ஸ் அதிகாரி, டைரக்டர்கள், பிசினஸ்மேன் என கிட்டத்தட்ட 13 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் கைது செய்த நள்ளிரவே 13 பேரும் ஜாமீன் பெற்று சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூதாட்டப் புகாரில் நடிகர் ஷாம் கைதாகியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: என் தற்கொலைக்கு சீமானே காரணம்… நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்