அரசு விதிகளின் படி மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் மருத்துவ உதவி இல்லாமல் வீட்டில் பெண் குழந்தை பிரசவித்த தனியார் பள்ளி ஆசிரியை கிருத்திகா அதிக ரத்த போக்கால் மரணமடைந்தார். இதனையடுத்து வீட்டில் பிரசவம் பார்ப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தேனி அருகே கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் கண்ணன் (29). பிஇ பட்டதாரி. மனைவி மகாலட்சுமி (25). மகாலட்சுமிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கண்ணனின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அதை ஏற்காத கண்ணன், மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு தேனியை சுற்றி வந்தார்.

இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு சென்ற பின் நள்ளிரவு 11.50 மணியளவில் கண்ணன் தனது அறையை பூட்டிக்கொண்டு மனைவிக்கு பிரசவம் பார்த்தார். இதில் மகாலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மருத்துவ உதவி இல்லாமல் வீட்டில் பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவில் பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பேசியதாவது “பாட்டி முறை வைத்தியம் பின்பற்றப்பட்டு வந்த காலத்தில் பிரசவத்தின்போது ஏற்படும் இறப்புகள் 40 சதவீதமாக இருந்தது.

இன்றைக்கு சுகாதாரத்தை பொருத்தவரை, தமிழகம் தான் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களில் 70 சதவீதம், அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. பிரசவத்தின்போது தாய், சிசு உயிரிழப்பைத் தவிர்க்க மருத்துவமனையில் பிரசவம் அவசியம்.

இயற்கை மருத்துவத்தையும் தமிழக அரசு ஆதரிக்கிறது. அதே நேரத்தில், பயிற்சிப் பெற்ற மருத்துவா்கள் இல்லாமல், வீடுகளில் நடைபெறும் பிரசவத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டிலேயே பிரசவம் என்று விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.