புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மோடி பிரதமராக பதவியேற்ற நாளான இன்று (மே 26) நாடு முழுவதும் விவசாயிகள் கருப்பு தின அனுசரிப்பு போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக #BlackDay எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஒன்றிய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக போராடி வருகிறார்கள்.

கொரோனாவை காரணமாக வைத்து விவசாயிகள் போராட்டத்தை மறந்துவிட்ட ஒன்றிய பாஜக அரசு, அதை முற்றிலும் நிராகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், மோடி பதவியேற்ற நாளான மே 26 ஆம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

விவசாயிகளின் இந்த கருப்பு தின போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, சிவசேனா மற்றும் ஆம் ஆத்மி கட்சி உட்பட இந்தியாவின் முக்கிய பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

[su_image_carousel source=”media: 23573,23571″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்நிலையில் விவசாயிகள் திட்டமிட்டபடி இன்று டெல்லி எல்லைப்பகுதியான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் விவசாயிகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி, நரேந்திர மோடியின் உருவபொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாந்தர் கலான் மற்றும் சப்பா கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பிரதமரின் உருவ பொம்மையை எரித்தும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள சித்வான் கலான் என்ற கிராமத்தில் பெண்கள் ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அப்போது அவர்கள் “நாங்கள் போராடுவோம், வெல்வோம்” என்று முழக்கங்களை எழுப்பினர்.

பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும், விவசாயிகள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். மேலும் போராட்டத்தின் போது பிரதமரின் உருவபொம்மைகளை எரித்துள்ளனர். அதேபோல் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலும் விவசாயிகளின் கருப்பு தின போராட்டம் நடைபெற்றது.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து #BlackDay எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

[su_image_carousel source=”media: 23569,23570″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

தமிழ்நாட்டிலும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “மூன்று #FarmLaws-க்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய மோடி அரசு நிறைவேற்ற வேண்டும். அதேபோல் வேளாண் சட்டங்கள் குறித்து அளித்த வாக்குறுதிகளை திமுக நிச்சயம் நிறைவேற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டம் எதிர்ப்பு; மோடி பிரதமரான மே 26 ஆம் தேதி விவசாயிகள் கருப்பு தினப் போராட்டம்