நடிகர் விஜய் ரசிகர்கள் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தனது அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்க வியூகம் வகுத்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனளிக்கும் செயலை செய்து வருகிறார். அதன்படி, இந்தாண்டு விஜய் பிறந்த நாளில் அவரது ரசிகர்கள் இலவச உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

இதனை அவரது ரசிகர்களே முதலீடு செய்து, மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இதற்கு ‘விலையில்லா விருந்தகங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் இலவச உணவு வழங்கி வருகின்றனர்.

சென்னை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விலையில்லா விருந்தகங்கள் ஏற்படுத்தி செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை ஓராண்டிற்கு செயல்படுத்த விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.