பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடைவிதித்து, வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை மட்டும் தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா தொற்று பரவாமலிருக்கவே இந்த தடை என்றும், பொதுமக்கள் வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபடவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 1.5 லட்சம் விநாயகர் சிலைகளை அரசின் தடையை மீறி பொது இடங்களில் நிறுவுவோம் என இந்து அமைப்புகள் அறிவித்தன. இதுகுறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று (ஆகஸ்ட் 20), அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தடை உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கணபதி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், கொரோனா தொற்று குறித்து நாங்கள் நன்கு அறிந்து உள்ளோம். இது மத உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்.

பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் நீதிமன்றத்திற்கு மாற்றுக் கருத்தில்லை, 5 அல்லது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளை பின்பற்றி பொதுமக்கள் சிலையை வைத்து வழிபட்ட பின் அதனை பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது, அல்லது சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா.. என்பது தொடர்பாக தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 21) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவ்வாறு அனுமதிப்பது சிரமம் என்றும், கட்டுப்பாடுகள் மீறப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள், நீங்கள் சிறிய கோவில்களை திறந்திருக்கிறீர்கள். அந்த கோவில்களில் 10 ஆயிரம் பேர் கூடினால் பிரச்சனை ஆகாதா என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் மெரினாவில் அனுமதிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் மெரினாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மெரினாவில் அனுமதித்தால் கூட்டம் அதிகமாகும். மக்களை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிடவில்லை. அதேவேளையில் வீடுகளில் வைத்து பூஜை செய்யக்கூடியவர்கள் சிலைகளை தனியாக எடுத்து சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து கொள்ளலாம். சட்ட ஒழுங்கை மீறுபவர்கள் மீது அது சம்பந்தமான காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க: அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் அரசு நடவடிக்கை எடுக்கும்; நீதிமன்றம் அல்ல