இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பினரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாா்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது. இவை பாகிஸ்தானில் இருந்து இந்திய கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட இருந்தது என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்தது.

இதுதொடா்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் இலங்கையைச் சோ்ந்த 6 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையைச் சோ்ந்த சற்குணம் என்கிற சபேசன் (47) என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சோ்ந்தவா். இவர் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் கடத்தி, அதன்மூலம் கிடைத்த தொகையை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிா்ப்பிக்கும் முயற்சிக்காக வழங்கியுள்ளதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்தது.

மேலும், சற்குணம் என்கிற சபேசனுக்கு சொந்தமாக வளசரவாக்கம், ஐயப்பன் தாங்கல் பகுதியில் தங்கியிருந்த இடங்களில் சோதனை செய்ததில், முக்கிய பொருள்களும், சமீபகாலமாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அணுப்பிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கடந்த 6 ஆம் தேதி என்.ஐ.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அக்டோபர் 5 ஆம் தேதியன்று புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் சற்குணன் என்கிற சபேசன் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.

அதன்மூலம் கிடைத்த பணத்தை புலிகள் அமைப்பின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் அனுதாபிகளோடு அவர் சதிக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு 1991-ல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது.

இந்தியாவை பொறுத்த வரை விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ல் நீட்டிக்கப்பட்ட தடை 2019-ல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.

இத்தகைய கூட்டங்களில் வன்முறையை தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர் பேசி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

வளசரவாக்கம், ஐயப்பன் தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ்நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கிறார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இத்தகைய சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில் அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்த போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.