சூது கவ்வும், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் கருணாகரன். தற்போது அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கருணாகரனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ‘சர்கார்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது, அரசன் பற்றிய குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

அதை மேற்கோள் காட்டி நடிகர் கருணாகரன் அரசியல்வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்தக்கதை, அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதா இல்லை நடிகர்களுக்கும் பொருந்துமா.. தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என ரசிகர்களிடமும் சொல்லிப் பாருங்கள். ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்தக் கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, விஜய் ரசிகர்களுக்கும் கருணாகரனுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் மூண்டது.

மேலும் கருணாகரன் தனது பதிவில், “நான் தமிழகத்தை சேர்ந்தவனா என்று முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா.. என்றும், அடுத்த கேள்வி என் தாய் மொழி பற்றி. நீங்கள் ரெடியா சர்கார் அடிமை” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்து விஜய் ரசிகர்களின் மிரட்டலுக்கு பதில் அளித்த கருணாகரன், “நீங்கள் என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது என்றும் ரசிகர்கள் போடும் கமெண்டுகள் அந்த நடிகரின் தராதரத்தை விவரிக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

கருணாகரனின் இந்த பதில்கள் விஜய் ரசிகர்களை மேலும் ஆத்திரமடைய செய்யவே மோசமான வார்த்தைகளால் கருணாகரனை திட்ட தொடங்கினார்கள். மேலும் கருணாகரன் படம் போட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் வெளியிட்டனர்.

இவற்றை ஆதாரமாக வைத்து கருணாகரன் தனது தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், தோற்றம் என பல விதங்களிலும் தவறாக கொலை மிரட்டல் விடுத்த சிலர் மீது இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.