சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேரடியாக வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நேரடி வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை. முக்கியமான வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், வழக்கு விசாரணைகளை வழக்கம்போல் நேரடியாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காலையில் மூன்று அமர்வு, மாலையில் மூன்று அமர்வு என இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வுகளில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கப்படவுள்ளது.

இரண்டு வாரங்கள் சோதனை அடிப்படையில் நடத்தப்படவுள்ள இவ்வழக்கு விசாரணைகளின்போது, யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென்றால், அதன்பிறகு தனி நீதிபதிகள் கொண்ட அமர்விலும் வழக்கு விசாரணகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

160 நாட்களுக்கு பிறகு, உயர் நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கப்படவுள்ளதால், வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: பழைய பேருந்துகளை பெண்கள் கழிவறைகளாக மாற்றும் ‘ஸ்த்ரீ டாய்லெட்’ திட்டம்