வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வரி செலுத்துவோர் வருமானவரி சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதில் சவால்களை சந்தித்து வருவதால் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) அவசரசட்டம் 2020 கடந்த 2020 மார்ச் 31-ம் தேதி கொண்டு வரப்பட்டது.

அதன்படி பல்வேறு விஷயங்களில் காலவரம்புகள் நீட்டிக்கப்பட்டன. குறிப்பாக, 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.

அவசர சட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த ஜூன் 24ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2019-20 நிதியாண்டுக்கான அனைத்து விதமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடு நவம்பர் 30, 2020 வரை நீடிக்கப்பட்டது. இதன்படி, 2020ஆம் ஆண்டில் ஜூலை 31, அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரியை நவம்பர் 30, 2020-க்குள் தாக்கல் செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக வரி தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வது வருமான வரி சட்டம்,1961-ன் கீழ் 2020 அக்டோபர் 31-வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 ஜனவரி 31 வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தங்களது கணக்குகளைத் தணிக்கை செய்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வரி தணிக்கை அறிக்கை, சர்வதேச மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான அறிக்கை உள்ளிட்டவற்றை தணிக்கை செய்து அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி; இந்தியாவில் 100 பேர் மீது செலுத்தி பரிசோதனை