நடிகை கீர்த்தி சுரேஷ், “பொன்னியின் செல்வன்” படத்தில் குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க, மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் தொடரவில்லை.

நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வானதி, நந்தினி உள்ளிட்ட கேரக்டர்களுக்கு நடிகர்களின் தேர்வு பெரும் சவாலாக இருந்தன.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். பல வருடங்களாக இந்த கதையை படமாக எடுக்க நினைத்தவருக்கு சரியான நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காததால் படம் எடுப்பதில் தாமதமானது.

முன்னணி நடிகர்கள் அஜித், விஜய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என்று கூறப்பட்டது. கடைசியில் முக்கிய வேடங்களில் விக்ரம், ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன்பாபு ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான குந்தவை நாச்சியார் கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. லைகா தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கி அடுத்த ஆண்டு மத்தியில் முடியும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி நடிக்க விருப்பதாக கூறப்பட்டது.