2013 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ.7 வரை உயர்ந்ததற்கு அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசே காரணம் எனக் கூறிய நிர்மலா சீதாராமன், 2021 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைந்ததில் இருந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

கொரோனாவுக்கு பிறகு கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61%, 56% வரியை மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனால் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பாஜக மோடி அரசின் செயல்பாடுகளால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் உள்ளார்கள். குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனையாகிறது. மேலும் டீசல் விலையும் கிட்டத்தட்ட ரூ.100ஐ நெருங்கிவிட்டது.

அதேபோல் கடந்த 2 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.175 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.இதனால், தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான் காரணம் என பிரதமர் மோடி காங்கிரஸ் மீது பழியைச் சுமத்தி வருகிறார். அமைச்சர் நிதின் கட்கரியோ, பெட்ரோல் உலை உயர்ந்து வருவதால் மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என அலட்சியமாக தன் கடமையை உணராமல் பேசுகிறார்.

இந்நிலையில் சென்னை தியாகராயநகரில்‌ செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌, “பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கின்றன.

நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. பெட்ரோல்‌, டீசல்‌ மீதான வரியைக்‌ குறைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள்‌ இணைந்து ஆலோசிக்க வேண்டும்”‌ எனத்‌ தெரிவித்துள்ளார்.

மேலும் 2013 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ.7 வரை உயர்ந்ததற்கு அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசே காரணம் எனக் கூறிய நிர்மலா சீதாராமன், 2021 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காரில் போதைப் பொருள்.. சிக்கிய பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி