மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (MBC) வன்னியர்கள் உள்ளனர். மொத்த இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி,

கடந்த அதிமுக ஆட்சியின் போது பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்ற கடைசி நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்நிலையில் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன.

முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம். 68 சமூகங்களைக் கொண்ட சீர் மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள வன்னியர் அல்லாத பிற சமுதாயத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரித்து வந்தனர்.

விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு வழங்கி இருப்பது, சட்டத்துக்கு முரணான இட ஒதுக்கீடாக உள்ளது. சாதி ரீதியான கணக்கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை.

தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற சாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை கடந்த வாரம் ஒத்திவைத்து இருந்தனர். இந்நிலையில் இன்று (01.11.2021) இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், “மிகவும் பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்தை ஒதுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழ்நிலையில் இதுபோன்ற அரசாணை பிறப்பிக்கலாமா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதில்கள் ஏற்றுக்கொள்பவையாக இல்லை. இந்த அரசாணை அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது.

எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுப்பணிகளில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.