மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் ரூ.6,230 கோடி நிதி விரைவில் வழங்கிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சரிசெய்திடவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் வழக்கமான நிலைமைக்குக் கொண்டு வரவும் ஏதுவாக,

ஒன்றிய அரசின் நிதியினை விரைவில் விடுவித்திட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29-12-2021) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்துள்ளது.பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய குழுவினர் 21-11-2021 அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி,

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 16-11-2021, 25-11-2021 மற்றும் 15-12-2021 ஆகிய நாட்களில் சேத விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் வழக்கமான நிலைமைக்குக் கொண்டு வரவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.