அதிக மதிப்பில் வங்கி மோசடி செய்த நபர்கள் பட்டியல் குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்பி வைத்த பட்டியலை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வாராக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டு நிலைக்குழு விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு ரகுராம் ராஜன் கடந்த மாதம் பதிலளிக்கையில்,

“ரிசர்வ் வங்கி கவர்னராக நான் இருந்தபோது, நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கு விரைவில் அறிக்கை அளிக்க ஏதுவாக ரிசர்வ் வங்கியால் மோசடி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அதிக மதிப்பில் மோசடி செய்த நபர்கள் குறித்த பட்டியலையும் பிரதமர் அலுவலகத்துக்கு நான் அனுப்பி வைத்தேன். அதில் மோசடி செய்தோரில் 1 அல்லது 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எனக்கு தெரியாது” என்றார்.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு ரகுராம் ராஜன் அனுப்பிய மோசடி செய்த நபர்கள் பட்டியல், அவர்கள் மீது பிரதமர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை மற்றும் இந்த விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரியின் பெயர் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் சட்டம் (ஆர்டிஐ) மூலம் கேட்டிருந்தார்.

ஆனால், இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி இது தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலக செயலர் மற்றும் மத்திய பொது தகவல் அலுவலர் பிரவீன் குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் தெரிவித்துள்ளதாவது, ட்இந்த தகவல் விசாரணை பாணியில் உள்ளது. ஆர்டிஐ சட்டம், 2005-ன் பிரிவு 2(எஃப்) படி இது தகவல் என்ற வரையறையின் கீழ் வராது” என்றார்.