கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஃபேவிபிராவிர் என்ற மாத்திரைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 90.79 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், பல்வேறு நாடுகளும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் கொரோனா வைரஸை எதிர்க்கக் கூடிய ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) மாத்திரையை உற்பத்தி செய்துள்ளது. லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களிடம் இந்த மருந்தை சோதித்ததில் 80% வரை வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (DGCI) இந்த மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஃபேவிபிராவிர் மாத்திரை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.14 கோடியை தாண்டியது

இதுகுறித்து கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், “இந்தியாவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் ஃபேவிபிராவிர் மருந்திற்கு அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம். இம்மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நான்கு நாட்களில் நோயாளியிடம் நல்ல முன்னேற்றத்தினை காண முடியும்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துவிட்டதால் இந்த மருந்தின் தேவை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. எனவே நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இம்மருந்தினை விரைவாக கொண்டு சேர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.