உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் சென்ற கார் மோதி நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

மேலும் விவசாயிகள் மீது கார் ஏறி கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (08-11-2021) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேச காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், உத்தரப் பிரதேச காவல்துறையின் தற்போதைய விசாரணையை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்த பரிந்துரைத்தார். இதற்கான பதிலை உத்தரப் பிரதேச அரசு வரும் வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்வரை, விசாரணையை மேற்பார்வையிட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின் அல்லது ரஞ்சித் சிங் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்றம்.

இதற்கிடையே, வீடியோ ஆதாரம் தொடர்பான தடயவியல் அறிக்கைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதையும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.