ரேபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளைத் தடை செய்துள்ள டெல்லி அரசு, இதை மீறினால் ரூ.10,000 அபராதமும், ஓராண்டு சிறையும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் பெருநகரங்களில் மக்களுக்கு பயனுள்ள வாகன சேவையாக இயங்கி வருவது ரேபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகள். ஆட்டோ, கார் போன்ற மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்களின் டாக்ஸி சேவையைக் காட்டிலும் குறைந்த கட்டணம் கொண்ட சேவையாக இருப்பது இரு சக்கர டாக்ஸிதான்.

எனவே இது அறிமுகமான சில காலங்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், பல படிக்கும், வேலை பார்க்கும் இளைஞர்களின் பகுதிநேர வேலையாகவும், வாழ்வாதாரமாகவும் இருந்து வருவது இதுதான்.

ஆனால், இரு சக்கர வாகனங்களில் வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், அப்படியான சேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கும் மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதியில்லை.

இந்நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும் எனக் கூறி வணிக பைக் டாக்ஸி சேவைகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது.

தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரமும் செய்ய முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.