அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது ரிபப்ளிக் தொலைக்காட்சி மீதும் பொய்கள், தவறான தகவல், அவதூறு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றங்களை சுமத்தி, பாலிவுட் தயாரிப்பாளர் சந்தீப் சிங் சார்பில் ஒரு நீண்ட வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சந்தீப் சிங் சார்பாக அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் குமார், அக்டோபர் 14ம் தேதி இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரின் குழுவினர், அவதூறு பரப்பியதாகவும், துன்புறுத்தியதாகவும், மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் பதியப்பட்டுள்ளது. மேலும் தனது வக்கீல் நோட்டீஸில் ரூ.200 கோடி நஷ்ட ஈடும் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் சந்தீப் சிங்.

மொத்தம் 38 பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் சங்கங்கள், ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் டைம்ஸ் நவ் சேனலுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளதையடுத்து, தற்போது தயாரிப்பாளர் சந்தீப் சிங்கும் ரூ.200 கோடி நஷ்ட ஈடு கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது, ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. தற்போது, பாலிவுட் தயாரிப்பாளர் உலகமும் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது தொலைக்காட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது, அர்னாப்பை அதிக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

முன்னதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் முறைகேடு தொடர்பாக அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ரிபப்ளிக் சேனல் டிஆர்பி ரேட்டிங் மோசடி: தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதை நிறுத்திய பிஏஆர்சி