ரிபப்ளிக் சேனல் உள்ளிட்ட சில சேனல்கள், டிஆர்பி ரேட்டிங் புள்ளிகளில் மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்திச் சேனலுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நேயர்களுக்கான ஒளிபரப்பு ஆய்வுக் குழு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 வழங்கப்பட்டு வந்துள்ளது. பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைக் கவரும் நோக்கில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்காக இந்த நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ரிபப்ளிக் சேனல், பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கல் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த டிஆர்பி மோசடி தொடர்பாக ரிபப்ளிக் சேனலின் செய்திப் பிரிவில் உள்ள சில உயர் அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிபப்ளிக் சேனல் சார்பாக மனுதாக்கல் செய்து, உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்ததையடுத்து, நேற்று போலீஸ் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களை மதிப்பீடு செய்து டிஆர்பியைக் கணக்கிட்டு வெளியிடும் பிஏஆர்சி நிறுவனம் இன்று (அக்டோபர்.15) வெளியிட்ட அறிவிப்பில், புள்ளிவிவரங்களை மதிப்பிடுதல், தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பக்குழு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த ஆய்வுகளுக்கு 8 முதல் 12 வாரங்கள் தேவைப்படும்.

ஆதலால், அடுத்த 12 வாரங்களுக்கு அனைத்து மொழிகளிலும் செய்தி சேனல்களுக்கான வார டிஆர்பி ரேட்டிங் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: டிஆர்பி மோசடி: ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்