பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வரும் 1 ஆம் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றும் நிலையில், கடந்த ஜூலை மாதம் 400 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து தன் மீதான வழக்கை விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு இன்று (29.10.2021) விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி மட்டும் நேரில் ஆஜரானார். டிஜிபி ஆஜராகாததற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி கோபிநாதன், வழக்கு விசாரணையை 90 நாட்களில் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் உங்களுக்கு 15 நாள் கால அவகாசம் வழங்கினால்,

மீதமுள்ள 75 நாட்களில் நான் எப்படி வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், ராஜேஷ் தாஸ் நவம்பர் 1 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். நவம்பர் 1 ஆம் தேதி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.