பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு பின்னர் மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்களுக்கு காப்புரிமை பிரச்சினை ஏற்பட்டு பூதாகரமானது. சினிமாவில் 50 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் பயணித்து, பல இடங்களில் இசைக் கச்சேரிகள் நடத்தினார் எஸ்.பி.பி. அப்போது இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் சிலவற்றை அதில் பாடினார்.

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என அந்த நோட்டீசில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இனி இளையராஜா பாடல்களை தான் மேடையில் பாடப் போவதில்லை என அறிவித்தார் எஸ்.பி.பி. பின்னர், இந்தப் பிரச்சினை மீதான பல்வேறு வாதங்களுக்குப் பிறது, என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் பரவாயில்லை நான் இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவேன் என அதிரடியாக அறிவித்தார்.

இப்பிரச்சினையால் இனி, இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடல்களை ஒரே மேடையில் கேட்க இயலுமா என்ற வருத்தம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் 2ம் தேதி இளையராஜா பிறந்தநாளையொட்டி, இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்த இருக்கிறார். சென்னை – செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில், எஸ்.பி.பி., கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப், மனோ ஆகிய பாடகர்கள் பாட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.