ரசிகர்களின் பிராத்தனையால் நான் விரைவில் குணமடைவேன் என்று எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்குப் பின் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 60 ஆண்டுகளாக பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் ஜானகி.

இவர் சமீபத்தில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்ற இடத்தில் வழுக்கி விழுந்தார். இதில் ஜானகிக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. இதையடுத்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிதின் கூறியதாவது, “அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு 81 வயதாகிறது. இந்த வயதில் இது சகஜம் தான். எலும்பு முறிவை சரிசெய்ய ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. அவர் 3 வாரங்களில் குணமாகி நன்றாக நடக்க ஆரம்பித்துவிடுவார். தற்போதைக்கு அவருக்கு ஓய்வு தேவை” என்றார்.

அறுவை சிகிச்சை முடிந்து ஜானகி நேற்று வீடு திரும்பினார். அவர் உடல் நலம் சரியாகும் வரை மைசூரில் தங்க உள்ளார். ரசிகர்களின் பிராத்தனையால் நான் சீக்கிரம் குணமடைவேன் என்று ஜானகி தெரிவித்துள்ளார்.