தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. சவுத் சென்சேஷன் நாயகனான விஜய் தேவரகொண்டாவை அவரது ரசிகர்கள் ‘ரவுடி’ என செல்லமாக அழைக்கின்றனர்.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸிவாலா படங்களின் மூலம் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் வரை ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சினிமாவை தாண்டி நடிகர் விஜய் தேவரகொண்டா ‘ரவுடி’ என்ற பிராண்டில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த பிராண்டின் லோகோவில் ரவுடி என எழுதி குறுக்கே ஒரு கோடு போடப்பட்டிருக்கும்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் சிலர், பைக் நம்பர் பிளேட்டில் நம்பர் ஒட்டுவதற்கு பதிலாக, ரவுடி பிராண்டின் லோகோவை ஒட்டியிருந்தனர். அதை பார்த்த ஹைதராபாத் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருந்தனர்.

இதனை கண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, இச்சம்பத்திற்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டு, ஹைதராபாத் போலீசாரிடம் மன்னிப்புக் கோரி, தனது ரசிகர்களுக்கும் மெசேஜ் ஒன்றையும் கூறியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், “ரவுடி என்ற சொல்லை பார்த்தால் குடும்பமாக நினைக்க தோன்றுகிறது. குடும்பத்தில் யாரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பதற்காக சொல்கிறேன். உங்களது அன்பை நிரூபிக்க நிறைய வழி இருக்கின்றன. லோகோவை பைக்கில் பல பாகங்களில் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால், நம்பர் பிளேட் நம்பர் ஒட்டவே வைத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் “டியர் காம்ரட்” என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஹீரோ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் மே 31ஆம் தேதி நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.