கிராமத்து மண்வாசனையுடன் உருவாகி வரும் படம் “சீயான்கள்”. இப்படத்தை கடிகார மனிதர்கள் படத்தை இயக்கிய வைகறை பாலன் இயக்கியுள்ளார். கே.எல். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரிகாலன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சீயான்கள் படம் தேனி அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் படமாக்கியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த 70 பேர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

70 நாட்களில் படம் பிடிக்கப்பட்டு, தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் இப்படம் குறித்து பேசிய இயக்குனர் வைகறை பாலன், “நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேலும் அவர்கள் அனைவருக்கும் நீண்ட காலத்திற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

4 அல்லது 5 பிரபலமான முகங்கள் தவிர, மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அத்தகைய நீண்ட தூரத்துக்கு நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது, தினமும் 2- முதல் 3 மணி நேரம் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது.

சீயான் என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்” என்றார்.இப்படம் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.