தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை அதானி பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி பல ஆயிரம் கோடி கடனை அதானிக்கு வழங்கிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது என மோடி- அதானி கூட்டணியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்.எல்.சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. இது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதனால், அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதன் மீது விவாதம் நடத்தாமல் அவையை எதிர்க்கட்சிகள் முடக்குவதாகக் கூறி தொடர்ந்து நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு ஒத்திவைத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (07.2.2023) கூடிய நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, அதானி குறித்து பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது, “இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது நாட்டு மக்களின் குரலுக்கு செவி கொடுத்தேன். ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளால் நாட்டு மக்கள் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை என்னிடம் தெரிவித்தனர். குறிப்பாக விலைவாசி உயர்வு நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

அதேபோல், அக்னிபாத் திட்டம் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை அதானி பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதானி குழுமத்தின் ஆதிக்கம் நாடுமுழுவதும் பரவியிருக்கிறது. அதானியின் இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்? அதானி இத்தனை தொழில்களை உருவாக்க யார் உதவினார்கள்?

கடைசி 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு 8 பில்லியனிலிருந்து 140 பில்லியனாக உயர்ந்தது எப்படி? ஆஸ்திரேலியாவிக்கு பிரதமர் மோடி சென்றுவந்த உடன் எஸ்.பி.ஐ.வங்கி 1 பில்லியம் வங்கிகடன் வழங்கிகிறது. வங்க தேசம் சென்றுவந்த பின்னர் மின் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையிலும் அதுதான் நிலைமை. இலங்கை அரசு அதனை உறுதிசெய்துள்ளது. இதுதான் அதானிக்காக மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கை. இந்திய வெளியுறவுக் கொள்கை, அதானி வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி பல ஆயிரம் கோடி கடனை அதானிக்கு வழங்கிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இப்படி பெறப்பட்ட கோடிக்கணக்கான பணம் நிஜத்தில் இல்லாத போலி நிறுவனங்களுக்கு சென்றுள்ளது. அதன் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த போலி நிறுவனங்கள் யாருடையவை.

அந்த போலி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பிரதமர் சென்று வந்த பின்னர் எத்தனை முறை அதானி பின்னாலேயே பயணித்தார். எத்தனை ஒப்பந்தங்களைப் பின்னர் பெற்றார்?

இதன் மூலம் எத்தனை ஆயிரம் கோடி தேர்தல் பந்திரங்கள் மூலம் ஆளும்கட்சிக்கு கிடைத்தது?” என கேள்வி எழுப்பினார். முன்னதாக ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து பேச விடாதாதால் ‘அதானி அரசு ஒழிக’ என்று எதிர்கட்சிகள் முழக்க மிட்டனர்.