பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கிய ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், அல்லது பதவி விலகுங்கள் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஆனால் அது பொய் என்று தமது டுவிட்டர் பதிவில் குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, ரபேல் விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக பேசி ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை நிர்மலா சீதாராமன் கூறி வருவதாக சாடியுள்ளார்.

ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அந்த நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப்சுர்ஜ்வாலா கூறியுள்ளார்.