ராஜஸ்தானிலிருந்து அசாம் சென்ற பிகானர் விரைவு ரயில், மேற்கு வங்கத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில், 45-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (13.1.2022) தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டன. சில பெட்டிகள் கவிழ்ந்தன. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து, அலிபூர்தார் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில், அலிபூர்தார் சந்திப்பில் இருந்து 90 கிமீ தொலைவில் இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததாகவும், விபத்து நடந்த பகுதிக்கு மருத்துவக் குழுவுடன் கூடிய விபத்து நிவாரண ரயில் புறப்பட்டுச் சென்றிருப்பதாகவும் வடகிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் விபத்து குறித்து விசாரிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து பற்றி தகவல் அறிந்த பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து விசாரித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.