கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள சேலம் மாவட்டத்தில், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா தனது மகள் திருமணத்தை இன்று உறவினர்களை திரட்டி நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி.சித்ரா குணசேகரன். இவரின் மகள் சிந்து. இவருக்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பிரசாந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் முழு ஊரடங்கு சேலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: முழுஊரடங்கு உத்தரவால் காற்றில் பறந்த சமூக இடைவெளி.. செயலிழந்த தடுப்பு நடவடிக்கை

இதனையடுத்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நடப்பதாக இருந்த திருமணம் சேலம் ஏற்காடு முருகன் கோவிலில் இன்று காலை அவசர அவசரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டுள்ளனர். திருமண நிகழ்வை ஒட்டி ஏற்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்ததால் முழு ஊரடங்கு விதி காற்றில் பறக்க விடப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திருமணம் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே கட்டுப்பாடுகளை மதிக்காமல் நூற்றுக்கணக்கானோரை திரட்டி திருமண நிகழ்வை நடத்தியது ஏற்காடு பகுதி மக்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.