கொரோனா தொற்று நோய்க்கு மும்பையில் 40 காவல் துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக 2 கான்ஸ்டபிள்கள் உயிரிழந்திருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் கொரோனா தாக்கமும் உயிரிழப்பும் பெருந்துயரமாக இருந்து வருகிறது. மேலும் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

கொரோனாவைத் தடுக்க கடைபிடிக்க வேண்டிய தனிநபர் இடைவெளி என்பதை நினைத்து கூட பார்க்க முடியாத நெரிசலான வாழ்விடப் பகுதி தாராவி. பல லட்சம் மக்கள் வசித்தாலும் நூறுகள் எண்ணிக்கையில்தான் பொது கழிப்பிடங்கள். இவைபோன்ற காரணங்களால் தாராவியில் கொரோனாவின் பாதிப்பு உக்கிரமடைந்துள்ளது. தாராவியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் வாசிக்க: தாராவி மக்களை கலங்கவைக்கும் கொரோனா

இந்நிலையில் மும்பையில் கொரோனாவுக்கு தற்போது 2 காவல் துறையினர் பலியாகி உள்ளனர். மும்பையில் முதல் முறையாக போலீசார், கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர். இரண்டு பேருமே தலைம கான்ஸ்டபிள்கள். இருவரது மரணமும் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மும்பை நகரத்தில் இதுவரை 40 காவல் துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.