அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் முடக்கம் காரணமாக, ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி புஷ் பீட்சா வழங்கினார்.
 
மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளன.
 
இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர் ஊதியம் இன்றி வேலை பார்த்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், தனக்காக ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ரகசிய சேவை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ‘பீட்சா’ வாங்கி கொடுத்தார்.
 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரே நேரில் சென்று ஒவ்வொருவருக்கும் ‘பீட்சா’ வை வழங்கினார்.
 
இது தொடர்பாக ஜார்ஜ் புஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ‘பீட்சா’ வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “நமக்கு ஆதரவு அளிக்கும் நம்முடைய சக மனிதர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.