அரசு விழாவுக்கென்று தனி மரியாதை இருக்க வேண்டும். விழாவில் பங்கேற்க அழைத்துவிட்டு யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் ‘பராக்கிரம திவாஸ்’ என கொண்டாடப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி நோதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த நாள் இன்று (ஜனவரி 23) கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவகத்தில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து மேற்கு வங்க அரசுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற ‘பராக்கிரம திவாஸ்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கார் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற மேடைக்கு வந்தபோது கூட்டத்தில் இருந்தரவர்கள் சிலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் கோபமடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, “இது அரசு விழாவே தவிர அரசியல் நிகழ்ச்சியல்ல. அரசு விழாவுக்கென்று தனி மரியாதை இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துவிட்டு யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. எனது போராட்டத்தின் வெளிப்பாடாக இந்த நிகழ்ச்சியில் நான் பேசப்போவதில்லை. ஜெய்ஹிந்த், ஜெய் வங்காளம்” எனக் கூறிவிட்டு சென்று விட்டார்.

பாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு