கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வீடு பெங்களூரு ஆர்.டி.நகரில் அமைத்துள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக அவரது வீட்டின் முன்பு, பெங்களூரு கோரமங்களா காவல் நிலைய காவலர்கள் சிவக்குமார், சந்தோஷ் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முதலமைச்சர் வீட்டின் அருகே உள்ள சர்க்கிள் பகுதியில் ஒய்சாலா காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு காவலர்கள் சிவக்குமார், சந்தோஷ் இருவரும், 2 பேருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரோந்து காவல்துறையினர், சிவக்குமார், சந்தோஷ் மற்றும் மற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது முதலமைச்சர் வீட்டின் முன்பு காவலில் இருந்த காவலர்கள் சிவக்குமாரும், சந்தோசும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அந்த 2 பேரிடம் கஞ்சா விற்பனை செய்ய கொடுத்ததும், கஞ்சா விற்ற பணத்தை தராததால் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 4 பேரையும் ஆர்.டி.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது, பிரபல கஞ்சா விற்பனையாளர்களான அகில்ராஜ், அம்ஜத்கானிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து 2 காவலர்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவலர்கள் சிவக்குமார், சந்தோஷ் உட்பட 4 பேரையும் ஆர்.டி.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களை உயரதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது வந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாநில முதல்வர் வீடு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரே கஞ்சா விறப்னையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.