கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றான முகக் கவசத்தைத் தொட்டால் கூட கொரோனா ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் பலரும் முறையாக முகக் கவசம் அணிவதில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பாசிட்டிவ், நெகட்டிவ், அறிகுறிகள் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது என வலியுறுத்தப்படுகிறது. முகக் கவசம் அணிந்திருந்தாலும் குறைந்தபட்சம் 6 அடி தூரம் இடைவெளி விட்டு பேச வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருந்துக் கடைகளில் விற்கப்படும் சர்ஜிகல் மாஸ்க் தான் அணியவேண்டும். துணி மாஸ்க் அணியக்கூடாது. 8 மணிநேரத்துக்கு ஒருமுறை மாஸ்க்கை கட்டாயம் கழட்டி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

கொரோனா இல்லாதவர்கள் முகக் கவசத்தை கழட்டும்போது அதிலுள்ள ரப்பர் நூலை பிடித்துதான் கழட்டி குப்பையில் வீசவேண்டும், தவிர கையால் தொடக் கூடாது. காரணம், முகக் கவசத்தில் கொரோனா வைரஸ் தொற்றியிருந்தால் அது கையில் பட்டு நமக்கோ அல்லது மற்றவருக்கோ பரவலாம்.

மேலும் வாசிக்க: கொரோனாவுக்கு மாட்டுக் கோமியம் மருந்தா… பாஜக தலைவரின் பகீர் கருத்து

அதேபோல், கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள், பாதிப்புகள் வெளியே தெரியாத ஏ-சிம்டமேட்டிக் நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் அந்த வீட்டிலுள்ள அனைவரும் சர்ஜிகல் முகக் கவசம் அணிவது அவசியம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இன்னும் பாதுகாப்பாக விலகி இருக்க வேண்டும்.

சிலர் துண்டையும், துப்பட்டாவையும் முகக் கவசமாக வெளியிடங்களில் உபோயோகிக்கிறார்கள். அப்படி அணிபவர்கள் வீட்டிற்கு வந்ததும் கழட்டி வைத்துவிட்டு மீண்டும் வழக்கமான பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள். அதிலும், கொரோனா தொற்றியிருக்கும் என்பதால், அப்படியே வைத்துவிடக்கூடாது. வெளியில் சென்று வந்தவுடன் அந்தத் துணியை நன்கு துவைத்து காயவைத்துதான் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.