கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை உடனே துண்டிக்க வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரியது தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (02.03.2023) விசாரணைக்கு வந்தன.

அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டித்தது குறித்து மின்சார வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 44 செங்கல் சூளைகளில், 32 சூளைகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 118 செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மின் இணைப்பை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது, ஆதரிக்கக் கூடாது என அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 118 செங்கல்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்கக் கூறியுள்ள நிலையில், 44 சூளைகள் மட்டும் சட்டவிரோதமாக செயல்படுகிறது என எப்படி கூற முடியும் எனவும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதையடுத்து மீதமுள்ள செங்கல்சூளைகளின் மின் இணைப்பு இரண்டு நாட்களில் துண்டிக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன எனவும், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, 118 சட்டவிரோத செங்கல்சூளைகளுக்கான மின் இணைப்பை ஒரு நாளில் துண்டித்து, மார்ச் 6-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.

இல்லாவிட்டால், மின்சார வாரிய தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.