மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 மற்றும் 97007 99993 என்ற உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த மண்டலத்திற்கு ஒரு வாகனம் என 15 வாகனங்களை ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை இணைந்து மேற்கொண்ட நடவடிககைகளின் காரணமாக சென்னையில் இதுநாள் வரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுதிறனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்