ஜார்ஜ் பிளாய்டின் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ஹவுஸ்டன் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் மே 25ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின நபரின் கழுத்தில் டெரக் சவின் என்ற வெள்ளை இன காவல் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ வெளியாகி சர்வதேச பிரச்சினையாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த காவல் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் மிகத்தீவிரமான போராட்டங்கள் வெடித்து வன்முறைக்களமாக மாறியது. அமெரிக்கா மட்டுமல்லாமல் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் போலீஸ் அராஜகத்தை எதிர்த்தும், இனவெறியை கண்டித்தும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இரண்டு வாரங்களுக்கு மேலாக பெரிய இயக்கமே உருவாகி போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் வாசிக்க: மண்டியிட்டு அஞ்சலி செலுத்தும் கனடா பிரதமர்.. சுட்டுத்தள்ள உத்தரவிடும் அமெரிக்க பிரதமர்..

இந்நிலையில், நேற்று ஹவுஸ்டன் நகரில் ஜார்ஜ் பிளாய்டின் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு அனைத்து அமெரிக்க முன்னணி தொலைக்காட்சி சேனல்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் ஜார்ஜ் பிளாய்டின் உடலுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் ரோட்னி கூறும்போது, “உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் நினைவு கூரப்படுவார். அவர் உலகை மாற்றப் போகிறார்” என்று தெரிவித்துள்ளார். ஜார்ஜ் பிளாய்டின் இறுதிச் சடங்கில் சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர். மேலும், அவரது உடல் பொதுப் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தபோது சுமார் 6,000 பேர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் வீடியோ வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். இதற்கு முன் போலீஸ் அத்துமீறலால் கொலைசெய்யப்பட்ட கருப்பின நபர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இறுதியாக அவரது உடல் ஹவுஸ்டன் மெமோரியல் கார்டனில் ஜார்ஜ் பிளாய்டின் தாயார் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜார்ஜ் பிளாய்ட் மரணித்தாலும் ஒரு மாபெரும் இயக்கத்தையே உருவாக்கிவிட்டு சென்றுள்ளதாக பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும், அவர் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.