நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. எனவே, அணைகள் பாதுகாப்பில் பொதுவான நடைமுறையை கொண்டு வர அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.
 
இந்த மசோதாவை-2019 ஜல்(நீர்) சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அதிர் ரஞ்சன் சவுத்ரி, தருண் கோகாய், சசிதரூர், மணீஷ் திவாரி, பிஜூ ஜனதா தள உறுப்பினர் மஹ்தப், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் மற்றும் திமுக எம்.பி, ஆ.ராசா, ஆர்எஸ்பி எம்.பி பிரேமசந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
தண்ணீர் என்பது மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த மசோதாவுக்கு சட்டரீதியான தகுதி இல்லை என அவர்கள் கூறினர்.
மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றக்கூடாது என்று மக்களவையில் நேற்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
 
பிஜூ ஜனதா தள எம்.பி மஹ்தப் பேசுகையில், ‘‘இந்த மசோதா மூலம் மாநில அரசுகளுக்குரிய அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.
 
காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பேசுகையில், ‘‘அணை பாதுகாப்பு அமைப்பில் இடம் பெறுபவர்கள் யார் என்பதை இந்த மசோதா விளக்கவில்லை’’ என்றார்.
 
காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘அணை செயல்பாடு பாதுகாப்பில் கவனம் செலுத்துவதைவிட, அணை கட்டுப்பாட்டு பாதுகாப்பில்தான் இந்தமசோதா கவனம் செலுத்துகிறது. இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.
 
திரிணாமுல் எம்.பி சவுகதா ராய் பேசுகையில், ‘‘மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு தலையிடுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
 
இந்த மசோதாவை நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்பும்படி திமுக எம்.பி ஆ.ராசா கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், ‘‘நாட்டில் உள்ள 92 சதவீத அணைகள், மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
 
எனவே, அணைகள் பாதுகாப்புக்கு பொதுவான விதிமுறைகள் தேவைப்படுகிறது’’ என்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
 
தமிழகத்திற்கு சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிபள்ளம் ஆகிய 4 அணைகள் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன.
 
இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் பராமரிப்பு, பழுதுபார்க்கும் உரிமைகள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை பொறுப்பில் உள்ளன. இந்த மசோதா நிறைவேறினால் இந்த உரிமைகள் பறிபோகும்.
 
அடுத்து இந்த அதிகாரம் மத்திய அரசு அமைக்கும் தேசிய ஆணையம் அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுமா? அல்லது அணை அமைந்துள்ள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வழங்கப்படுமா? என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
 
இதனால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் எதிரானது என்று திமுக எதிர்ப்பு குரல் கொடுக்கிறது என திமுக எம்பிக்கள் தெரிவித்தனர்
 
மக்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், “அணைகளை கண்காணிக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தவிர, அணைகள் பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி ஒன்றையும் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
நாட்டில் மொத்தமுள்ள 5,344 பெரிய அணைகளில், 239 நூறாண்டுக்களுக்கு மேல் பழமையானவை. 1,041 அணைகள் 50 முதல் 100 ஆண்டுகள் பழமையானவை. இவற்றில் 92 சதவீத அணைகள் மாநிலத்தின் குறுக்கே ஓடும் ஆறுகளில் கட்டப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
 
நாடாளுமன்றத்தில் இதுவரையில் மூன்று முறை இதுபோன்ற அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படாமல் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.