தேர்வு கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஹரிகரன் மற்றும் செளந்தர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பில் படித்துவரும் 7 லட்சம் மாணவர்களிடம் கட்டணமாக ரூ.1450 என 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலை மற்றும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைகழகத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆகஸ்ட் 21 அன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அண்ணா பல்கலைகழகம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டது. செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது எனவும் அறிவித்துவிட்டது

இதனால் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பணம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்வுக் கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மேலும் வாசிக்க: விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்கும் மோடி அரசின் முடிவு- திமுக கடும் கண்டனம்